
புதுடெல்லி,
மராட்டிய தேர்தலில் முறைகேடு நடந்ததாக ராகுல் காந்தி மீண்டும் குற்றம் சாட்டிய நிலையில், தேர்தலில் பாதகமான முடிவு கிடைத்ததால் தேர்தல் கமிஷனை அவமதிப்பதாக தேர்தல் கமிஷன் கூறியிருந்தது. இதற்கு ராகுல் காந்தி பதிலளித்து உள்ளார்.அவர் தனது எக்ஸ் தளத்தில், 'அன்பான தேர்தல் கமிஷனே, நீங்கள் ஒரு அரசியல் சாசன நிறுவனம். கையெழுத்து போடாத, தப்பிக்கும் நோக்கிலான குறிப்புகளை வெளியிடுவது, தீவிரமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் முறை அல்ல. உங்களுக்கு மறைக்க எதுவும் இல்லை என்றால், எனது கட்டுரையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மழுப்பாமல் பதிலளித்து நிரூபியுங்கள்' என குறிப்பிட்டு உள்ளார்.
இதற்காக மராட்டியம் உள்பட அனைத்து மாநிலங்களின் மக்களவை மற்றும் சட்டமன்றம் சமீபத்திய தேர்தல்களுக்கான ஒருங்கிணைந்த, டிஜிட்டல், இயந்திரம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியல் மற்றும் மராட்டிய வாக்குச்சாவடிகளில் தேர்தல் நாளில் மாலை 5 மணிக்குப் பிறகு பதிவான அனைத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் வெளியிடுமாறும் அறிவுறுத்தி உள்ளார். கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிப்பது உங்கள் நம்பகத்தன்மையை பாதுகாக்காது என்றும், உண்மையை கூறுவதே அதை செய்யும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.