மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என எஸ்.பி. தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரை அடுத்த முட்டம் கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை(28), ராஜ்குமார்(34) ஆகியோர் புதுச்சேரி சாராயம், மதுபாட்டில்களை காரைக்காலில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி வந்து, அப்பகுதியில் விற்பனை செய்துள்ளனர். மது விற்பனையில் ஈடுபட்டதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட ராஜ்குமார் பிப்.14-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.
இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கும் தங்கதுரையின் சகோதரர் மூவேந்தனுக்குமிடையே கடந்த 13-ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தினேஷ் மற்றும் அவரது நண்பர்களான முட்டம் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ், அவரது சகோதரர் அஜய்(19), மயிலாடுதுறை சீனிவாசபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரிசக்தி(20) ஆகிய 4 பேரும் பிப்.14-ம் தேதி இரவு முட்டம் வடக்கு வீதியில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த தங்கதுரை, ராஜ்குமார், மூவேந்தன் ஆகிய 3 பேரும் தினேஷிடம் தகராறு செய்து, கத்தியால் குத்தியுள்ளனர்.