
கேரள திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி . இதுவரை ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவரது நடிப்பில் கடந்த மாதம் 23-ம் தேதி வெளியான படம் 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்'. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் நடிகர் மம்மூட்டி, கவுதம் மேனன் இணைந்து நடித்துள்ள புதிய படமான 'பசூகா' வருகிற ஏப்ரல் 10 அன்று வெளியாகவுள்ளது.
இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மோகன்லாலுடன் இணைந்து ஏற்கனவே ஒரு படத்தில் மம்முட்டி நடித்து வருகிறார். கிட்டத்தட்ட அந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில், அடுத்ததாக மம்முட்டி நடிக்கும் புதிய படம் ஒன்றின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.அதன்படி, இந்த படத்தை நிதிஷ் சகாதேவ் இயக்குகிறார். இவர் கடந்த 2023ல் பஷில் ஜோசப் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற பாலிமி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'மம்முட்டி கம்பெனி' தயாரிப்பில் அவர் நடிக்கும் மற்றொரு படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. .இந்தப் படத்திற்கு 'களம்காவல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மம்முட்டியுடன் இணைந்து விநாயகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.இதுவரை பார்த்திராத மம்மூட்டியைக் காணத் தயாராக இருங்கள் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இந்தப் படம் இவ்வாண்டின் இறுதிக்குள் வெளியாகும் கூறப்படும் நிலையில் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.