
கரூர்,
கரூர் மாவட்டம், க.பரமத்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இவர் கரூரில் உள்ள ஒரு பலகார கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்சா (35). மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (35). இவர் ரமேஷ் வீடு அருகே வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார்.
பக்கத்து வீடு என்பதால் சிவக்குமாருக்கும், அம்சாவுக்கும் கடந்த 5 ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது. பின்னர் அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து ரமேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது வீட்டில் மனைவி அம்சாவுடன், சிவக்குமார் தனிமையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து ரமேஷ் அதிர்ச்சி அடைந்தார்.
இதை தட்டி கேட்டபோது, சிவக்குமாருக்கும், ரமேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாகியது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து சிவக்குமாரின் தலை மற்றும் பல இடங்களில் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, ரமேசை கைது செய்தனர். பின்னர் அவரை கரூரில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி உத்தரவின்பேரில் ரமேஷ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.