சென்னை: மனைவி வாங்கிய சொத்துகள் குறித்து உயர் நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்காத மாவட்ட நீதிபதிக்கு கட்டாய ஓய்வு வழங்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உறுதி செய்து மனுவை தள்ளுபடி ெசய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட எஸ்.குணசேகர், சில குற்றச்சாட்டுக்கள் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதே நாளில் விருப்ப ஓய்வு கேட்டு குணசேகர் அளித்த விண்ணப்பத்தை ன்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அவருக்கு எதிராக குற்ற குறிப்பாணை பிறப்பிக்கப்பட்டது. அவர் 58 வயதை பூர்த்தி செய்ததால் 60 வயது வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டாம் என்று முடிவு செய்த சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் ஏழு பேர் அடங்கிய நிர்வாகக் குழு அவருக்கு கட்டாய ஓய்வு வழங்க முடிவு செய்தது. இந்த முடிவுக்கு உயர் நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் கொண்ட குழு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, மாவட்ட நீதிபதி குணசேகருக்கு கட்டாய ஓய்வு அளித்து தமிழக அரசு 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி குணசேகர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட நீதிபதி குணசேகர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின்படி அரசு ஊழியரின் வருவாய் ஆதாரத்தில் இருந்து இல்லாமல் அவரது குடும்பத்தினர் வாங்கிய சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை. குடும்பத்தினர் வாங்கிய சொத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற சுற்றறிக்கை அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு முரணாக உள்ளது. எனவே, தனக்கு கட்டாய ஓய்வு அளித்த உத்தரவை ரத்து செய்து, உரிய பணப்பலன்களுடன் விருப்ப ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற ஊழியர்களை மோசமாக நடத்தியது, மனைவி 25 அசையா சொத்துகள் வாங்கியது, பி.எம்.டபிள்யூ சொகுசு கார் வாங்கியது போன்ற விவரங்களை குணசேகர் உயர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கவில்லை. அவரது சம்பளக் கணக்கில் சந்தேகத்துக்கு இடமான வகையில் பெருந்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. பொது நலனை கருதி, அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீதித்துறை அதிகாரியான மாவட்ட நீதிபதி, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும். நீதித்துறை அதிகாரியை, அரசு ஊழியர்களைப் போல கருத முடியாது. நீதித்துறை அதிகாரிகள் உச்சபட்ச நேர்மையை கொண்டிருக்க வேண்டும். அதனால் உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு முடிவில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
The post மனைவி வாங்கிய சொத்துகள் குறித்து தெரிவிக்காத விவகாரம் கட்டாய ஓய்வை எதிர்த்து மாவட்ட நீதிபதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.