
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடப்பு நிதி ஆண்டுக்கான 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் தொடங்கி நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க வரும்படி அழைப்பு விடப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட இந்த நிதி ஆயோக் 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் தலைவராக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.
இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு தேவையான நிதியை விடுவிக்க பிரதமர் மோடியிடம், மு.க. ஸ்டாலின் நேரடியாக வலியுறுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் பிற மாநில முதல்-மந்திரிகளும் தங்கள் மாநிலத்திற்கு தேவையான நிதியை கேட்க உள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
* நிதிஆயோக் கூட்டத்தில், மத்திய வரிகளில் மாநிலங்களுக்கு 50 சதவீத உரிமைப் பங்கை வழங்க வேண்டும் என்று நான் கோரினேன். வாக்குறுதியளிக்கப்பட்ட 41 சதவீதத்திற்கு எதிராக தற்போது நாம் 33.16 சதவீதத்தை மட்டுமே பெறுகிறோம்.
* அம்ருத் 2.0 ஐப் போலவே, தமிழ்நாடு இந்தியாவிலேயே மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக இருப்பதால், அர்ப்பணிப்புள்ள நகர்ப்புற மாற்றப் பணியின் அவசியத்தை நான் வலியுறுத்தினேன்.
* தேசிய ஒற்றுமை மற்றும் பிராந்திய பெருமைக்காக ஆங்கிலத்தில் பெயர்களுடன் காவிரி, வைகை மற்றும் தாமிரபரணிக்கு #CleanGanga பாணி திட்டத்தையும் நான் வலியுறுத்தினேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், பிரதமர் மோடியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்தித்து பேசுவார் என தகவல் தெரிவிக்கின்றது. இதில், பள்ளி கல்வி துறை, மெட்ரோ ரெயில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த கோரிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த துறை சார்ந்த, தமிழகத்திற்கான நிதியை தருவது பற்றி அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்படும் என்றும் பிரதமருடனான இந்த சந்திப்பின்போது தமிழகத்திற்கு நிதி விடுவிப்பது பற்றி மு.க. ஸ்டாலின் வலியுறுத்துவார் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், இமாசல பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.