மதுரை; ‘எல்லை’ எடுத்துக் கொடுக்காமல் மாநில நெடுஞ்சாலைத் துறை கடந்த 4 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதால், வைகை ஆறு ‘ஸ்மார்ட் சிட்டி’ சாலை முழுமையாக நிறைவேற்றப்படாமல் முடங்கிபோய் கிடக்கிறது. உள்ளூர் அமைச்சர்கள், இந்த விவகாரத்தில் நீடிக்கும் சிக்கல்களை முடிக்க ஆர்வம் காட்டாமல் இருப்பதால், ரூ.381.41 கோடியில் போட்ட இந்தச் சாலையை மக்கள் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வைகை வடகரை மற்றும் தென்கரை நகரச்சாலைகளை எளிதாக கடக்கவும் வைகை ஆற்றின் கரையில் இருபுறமும் சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.81.41 கோடியும், நெடுஞ்சாலைத் துறை (தேசிய நெடுஞ்சாலைத் துறை அலகு) சார்பில் ரூ.300 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்து வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சாலை அமைக்கப்பட்டது. அடிப்படையில் வைகை ஆற்றின் இரு புறமும் உள்ள ஏற்கெனவே இருந்த சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது.