இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதங்களை திரும்ப ஒப்படைப்பதற்கான காலக்கெடு மார்ச் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023 மே மாதம் மெய்டீஸ் மற்றும் குக்கி இன மக்கள் இடையே ஏற்பட்ட மோதல் மாநிலம் முழுவதும் பரவியது. பல மாதங்கள் நீடித்த வன்முறை சம்பவங்களில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடு, உடமைகளை விட்டு விட்டு வேறு இடங்களுக்கு சென்றனர்.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.இந்த சூழ்நிலையில், கடந்த 13ம் தேதி முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா செய்தார்.இதனால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலானது. கடந்த 20ம் தேதி ஆளுநர் ஏ.கே.பல்லா வெளியிட்ட உத்தரவில்,பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரிடம் இருந்து கொள்ளையடித்த ஆயுதங்களை 7 நாட்களுக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும். 7 நாட்களுக்குள் ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து 300க்கும் அதிகமான ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதற்கான காலக்கெடு நேற்றுமுன்தினம் முடிவடைந்தது. இந்த நிலையில் இதை மார்ச் 6ம் தேதி வரை நீட்டித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான காலக்கெடு வரும் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் துப்பாக்கிசூடு:
இம்பால் கிழக்கு மாவட்டத்தில் மெய்டீஸ் மத வழிபாட்டு கூடத்தின் மீது நேற்று காலையில் மர்மநபர்கள் சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் யாருக்கும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
* அமித்ஷா இன்று ஆலோசனை
மணிப்பூரில் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில், ஆளுநர் ஏ.கே.பல்லா மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post மணிப்பூரில் ஆயுதங்கள் திரும்ப ஒப்படைக்க காலக்கெடு நீட்டிப்பு: ஆளுநர் உத்தரவு appeared first on Dinakaran.