மசோதாக்கள் மீது முடிவு எடுக்க 3 மாத கெடு விதிப்பு; உச்ச நீதிமன்றத்துக்கு ஜனாதிபதி 14 கேள்விகள்: தெளிவான விளக்கம் அளிக்க தலைமை நீதிபதிக்கு கடிதம்

4 hours ago 2

புதுடெல்லி: மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய முடியுமா என்பது உட்பட 14 கேள்விகளை எழுப்பி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கடிதம் எழுதியுள்ளார். அதில், தனது கேள்விகளுக்கு தெளிவாக விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுக்கும் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து அனைத்து விவகாரத்திலும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவை மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரம், மற்றும் துணைவேந்தர் நியமனம் ஆகியவை தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மூன்று வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்தும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தும் இருந்த பத்து மசோதாக்களுக்கு சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி கடந்த மாதம் 8ம் தேதி ஒப்புதல் வழங்கி தீர்ப்பளித்தது. அதே நேரத்தில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் 3 மாத அவகாசம் விதித்தது. தமிழ்நாட்டை போன்றே மசோதா விவகாரத்தில் ஆளுநர்களின் நடவடிக்கைக்கு எதிராக பஞ்சாப், கேரளா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் தொடந்துள்ள வழக்குகள் தற்போது வரையில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு, சுமார் 14 கேள்விகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார். அதாவது குடியரசுத் தலைவரின் அதிகாரமான 143ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் தனது விளக்கத்தை கேட்டுள்ளார். அதில்,\\”ஆளுநர்களுக்கும், ஜனாதிபதிக்கும் உச்ச நீதிமன்றம் காலக்கெடுவை நிர்ணயிக்க முடியுமா?. அதேப்போன்று குறிப்பாக தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசனை பெற அரசியலமைப்பின் 143வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை தான் ஜனாதிபதி தரப்பில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் அரசியலமைப்பே காலக்கெடுவை நிர்ணயிக்காதபோது, உச்ச நீதிமன்றம் எவ்வாறு குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடுவை நிர்ணயிக்க முடியும்?. இந்த விவகாரத்தில் தெளிவான விளக்கத்தை தரும் விதமாக, தலைமை நீதிபதி தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வை அமைக்க ஆலோசனை நடத்தி தெரிவிக்க வேண்டும்.

குறிப்பாக இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர் தரப்பின் முக்கிய கேள்வியாக இருப்பது என்னவென்றால் அரசியலமைப்பின் கீழ் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் என்னென்ன, மேலும் 142வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றம் எவ்வாறு அதன் சொந்த அதிகாரங்களுடன் அதனை மாற்ற முடியும். ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் முழுமையான அதிகாரத்தை மாநிலங்கள் துஷ்பிரயோகம் செய்கின்றனவா, ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் எவ்வாறு நிர்ணயிக்க முடியும். பிரிவு 200ன் கீழ் ஆளுநரின் முடிவுகள் என்ன. மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் அரசியல்சானத்தின் வழிமுறைகள் என்ன, சட்டப்பிரிவு 142இன் கீழ் உச்ச நீதிமன்றம் அசாதாரண அதிகாரங்களை எப்படி பயன்படுத்துகிறது. அவ்வாறு செயல்பட முடியுமா?. மேலும் மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் ஆளுநரின் அதிகாரமான அரசியலமைப்பு பிரிவு 200ஐ நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாத வகையில், அரசியலமைப்பு பிரிவு 361 பாதுகாப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றம் அதனை கருத்தில் கொண்டதா?.

குறிப்பாக அரசில்சாசன பிரிவு 200ன் கீழ் ஆளுநரின் விருப்புரிமை என்பது நியாயமான ஒன்றா?. அரசியல் சாசனபிரிவு 201ன் கீழ் குடியரசுத் தலைவர் விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா?. உச்ச நீதிமன்றம் தனிப்பட்ட அதிகாரமான அரசியல்சாசன பிரிவு 142ஐ பயன்படுத்தி குடியரசு தலைவர், ஆளுநர்களின் உத்தரவுகளை எப்படிப்பட்ட முறையில் மாற்ற செய்ய முடியும். அது எவ்வாறு சாத்தியமாகும். உச்ச நீதிமன்றம் தனிப்பட்ட அதிகாரமான அரசியலமைப்பு பிரிவு 142 நடைமுறை சட்டவிதிகளுக்கு மட்டும் பயன்படுத்த முடியுமா?, அல்லது நடைமுறை விதிகளுக்கு முரண்பாடான உத்தரவுகளை பிறப்பிக்கவும் அதற்கு அதிகாரம் உள்ளதா?, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தை அந்த அரசுகள் நடைமுறைப் படுத்தமுடியுமா என்பது உட்பட இத்தனை கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் விரைவாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நீதித்துறைக்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான இடைவெளி சமீப காலமாக அதிகரித்து வரும் நேரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் விளக்கம் கேட்டுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி எழுப்பியுள்ள 14 கேள்விகள்

  1. பிரிவு 200-ன் கீழ் ஒரு மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும்போது, அவருக்கு முன் உள்ள அரசியலமைப்பு விருப்பங்கள் என்னென்ன?
  2. ஒரு மசோதா ஆளுநர் முன் சமர்ப்பிக்கப்படும்போது, அவருக்கு இருக்கும் அனைத்து அரசியலமைப்பு விருப்பங்களையும் செயல்படுத்தும் போது, அமைச்சரவையால் வழங்கப்படும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்படுகிறாரா?
  3. சட்டப்பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் அரசியலமைப்பு விருப்புரிமை நியாயப்படுத்தத்தக்கதா?
  4. பிரிவு 200-ன் கீழ் ஒரு ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பாக நீதித்துறை மறுஆய்வுக்கு, பிரிவு 361 என்பது ஒரு முழுமையான தடையா?
  5. அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் ஆளுநரின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், சட்டப்பிரிவு 200ன் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களையும் ஆளுநரால் பயன்படுத்துவதற்காக, நீதித்துறை உத்தரவுகள் மூலம் காலக்கெடு விதிக்கப்பட்டு, செயல்படுத்தும் முறையை பரிந்துரைக்க முடியுமா ?
  6. பிரிவு 201ன் கீழ் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயப்படுத்தத்தக்கதா?
  7. அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், பிரிவு 201ன் கீழ் குடியரசுத் தலைவரின் விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடுவை விதிக்க முடியுமா?. அதேப்போன்று அதனை செயல்படுத்தும் முறை பரிந்துரைக்கப்படுமா?
  8. ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒதுக்கீடு செய்யும் போது பிரிவு 143ன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறவும், உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெறவும் குடியரசுத் தலைவர் கடமைப்பட்டுள்ளாரா?
  9. ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, நீதிமன்றங்கள் எந்த வகையிலும் அதன் உள்ளடக்கங்கள் மீது தீர்ப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறதா?
  10. மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக நடைமுறைப்படுத்த முடியுமா ?
  11. பிரிவு 145(3)ன் படி, எந்தவொரு உச்ச நீதிமன்ற அமர்வும், அரசியலமைப்பின் விளக்கம் குறித்த கணிசமான சட்ட கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலில் முடிவு செய்து, குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு அதை அனுப்புவது கட்டாயமில்லையா?
  12. பிரிவு 131ன் கீழ் வழக்குத் தொடருவதைத் தவிர, ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கு உச்சநீதிமன்றத்தின் வேறு எந்த அதிகார வரம்பையும் அரசியலமைப்புச் சட்டம் தடை செய்கிறதா?
  13. அரசியலமைப்பு அதிகாரங்கள் மற்றும் குடியரசுத் தலைவரின், ஆளுநரின் உத்தரவுகளையும் பிரிவு 142ன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியுமா?
  14. ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான பிரச்னைகளை இந்திய அரசியலமைப்பின் 131வது பிரிவின் கீழ் தீர்ப்பதை தவிர வேறு எந்தவொரு நீதிமன்ற அதிகாரமும் உச்சநீதிமன்றத்திற்கு தவிர்க்கப்படுகிறதா?

The post மசோதாக்கள் மீது முடிவு எடுக்க 3 மாத கெடு விதிப்பு; உச்ச நீதிமன்றத்துக்கு ஜனாதிபதி 14 கேள்விகள்: தெளிவான விளக்கம் அளிக்க தலைமை நீதிபதிக்கு கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article