குலசேகரம்: குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக திற்பரப்பு அருவி உள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. தற்போது பக்ரீத் பண்டிகை விடுமுறை, நேற்று வார விடுமுறை என்பதால் திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதற்கிடையே பெரும்பாலான தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இதனால் நேற்று மாலை வழக்கத்துக்கு மாறாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஏராளமானோர் கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்திருந்தனர். இதனால் திற்பரப்பு அருவிக்கு செல்லும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 1 கி.மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.
போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இதேபோல் அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணை பகுதியிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. அங்குள்ள உல்லாச படகு சவாரியில் சவாரி செய்து கோதையாற்றின் இயற்கை எழில்கொஞ்சும் அழகை கண்டு ரசித்தனர். திற்பரப்பு அருவி மற்றும் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் அசம்பாவிதங்களை தடுக்க திற்பரப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post தொடர் விடுமுறையை முன்னிட்டு திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம் appeared first on Dinakaran.