ஊட்டி: முதுமலை மற்றும் மசினகுடி பகுதியில் ‘பிளேம் ஆப் தி பாரஸ்ட்’ மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் தாவரவியல் பூங்கா,ரோஜா பூங்கா,சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உட்பட பல்வேறு பூங்காக்கள் உள்ளன. இவற்றில் பல்வேறு வகையான செடிகளில் மலர்கள் பூப்பதுண்டு. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.இதுமட்டுமின்றி நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வகையான காட்டுச் செடிகளில் மலர்கள் பூத்து அவ்வப்போது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
குறிப்பாக, சில மரங்களில் பூக்கும் மலர்களின் நிறங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஜெகரண்டா,செர்ரி, பிளேம் ஆப் தி பாரஸ்ட், சேவல் கொண்டை மலர்கள் மற்றும் ரெட் லீப் மரங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை மசினகுடி,முதுமலை,சிறியூர்,சிங்காரா போன்ற பகுதிகளில் பனிப் பொழிவு அதிகமாக உள்ள நிலையிலும்,மழையின்மை காரணமாக வறட்சி நிலவும்.இச்சமயங்களில் இந்த வனப்பகுதிகளில் உள்ள சிறிய செடி,கொடிகள்,புற்கள்,சிறிய மரங்கள் ஆகியன காய்ந்து விடுவது வழக்கம்.
கோடை காலத்தை வரவேற்கும் வகையில் பிப்ரவரி மாதங்களில் இந்த வனப்பகுதியில் ‘பிளேம் ஆப் தி பாரஸ்ட்’ எனப்படும் ஒரு வகை அறிய வகை மலர்கள் மரங்களில் பூப்பது வழக்கம். இந்த மலர்கள் தொலை தூரங்களில் இருந்து பார்க்கும் போது நெருப்பு பந்துகள் போல் காட்சியளிக்கும். இதன் காரணமாகவே இந்த மலர்களுக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது முதுமலை, மசினகுடி, சிங்காரா, மாயார், சிறியூர் போன்ற வனப்பகுதிகளில் இந்த பிளேம் பாரஸ்ட் என்ற சிவப்பு நிற மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. இந்த அரிய வகை மலர்களை சுற்றுலா பயணிகள் போட்டோக்கள் எடுத்துச் செல்கின்றனர்.
The post மசினக்குடியில் பூத்து குலுங்கும் ‘பிளேம் ஆப் தி பாரஸ்ட்’: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.