
புதுடெல்லி,
பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை தலா ரூ.2 உயர்த்தி மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதைப்போல கியாஸ் சிலிண்டர் விலையும் ரூ.50 உயர்ந்து உள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 'கடைசியில் மோடி ஜி 'வரி'க்கு (டிரம்ப் இந்தியா மீது விதித்த வரி) ஒரு தகுந்த பதிலடியை கொடுத்து விட்டார். பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை மேலும் அதிகரித்து இருக்கிறது. விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்களுக்கு அரசு கொள்ளையின் மற்றொரு பரிசும் வழங்கப்பட்டு இருக்கிறது' என கிண்டல் செய்திருந்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில், 'வாவ் மோடிஜி வாவ். கடந்த 2014 மே மாதத்தை ஒப்பிடும்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 41 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால் உங்கள் கொள்ளையடிக்கும் அரசோ, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை குறைப்பதற்குப் பதிலாக கலால் வரியை தலா ரூ.2 அதிகரித்துள்ளது' என பதிவிட்டுள்ளார்.