![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/38798128-woman.gif)
பிரயாக்ராஜ்,
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த 13-ந்தேதி தொடங்கிய இந்த மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வு, வரும் 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்திற்கு வருகை தந்து புனித நீராடி வருகின்றனர்
இந்த கும்பமேளா நிகழ்வில் இதுவரை 40 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபட்டுள்ளனர். மேலும் அங்குள்ள கும்பமேளா நிகழ்வின் போது ஏராளமான இளம் பெண்கள் துறவரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மகா கும்பமேளா விழாவில் திரிவேணி சங்கமத்தில் நீராடி சந்நியாச தீட்சை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்நியாச தீட்சை எடுத்து துறவறம் மேற்கொண்ட பெண்கள் சனாதனத்திற்கு சேவை செய்வதாக உறுதிமொழி எடுத்துள்ளனர். துறவறம் பூண்ட பெண்கள் பெரும்பாலானோர் உயர்கல்வி பயின்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.