மகளிர் சுய உதவிக் குழு பன்முக கலாசாரப் போட்டிகள் - உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

1 week ago 5

சென்னை,

மாநில அளவிலான, மகளிர் சுய உதவிக் குழு மகளிருக்கான பன்முக கலாசாரப் போட்டிகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை கருத்தில் கொண்டு, பெண்கள் பொருளாதாரத்தில் சுயசார்பு பெற்றிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், முத்தமிழறிஞர் கலைஞரால் 1989-ம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு இயக்கமானது, இன்று மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

'மகளிரின் வளர்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சி' என்பதை குறிக்கோளாக கொண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான 'திராவிட மாடல்' அரசு சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் செயல்பட்டு வரும் 3,29,039 மகளிர் சுய உதவி குழுக்களில் 37,76,575 மகளிரும், நகர பகுதிகளில் செயல்பட்டு வரும் 1,47,430 மகளிர் சுய உதவி குழுக்களில் 15,98,144 மகளிரும் தங்களது உற்பத்தி பொருட்களின் மூலம் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

2024-25ம் ஆண்டில் தமிழ்நாடு 9.69% உண்மை வளர்ச்சி வீதத்துடன் (Real Economic Growth Rate) இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2023-24ம் ஆண்டில் ரூ.15,71,368 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 2024-25ம் ஆண்டில் ரூ.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மகளிர் சுய உதவி குழு மகளிரும் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பினை வழங்கி வருகின்றனர். சுய உதவிக் குழு மகளிரின் பொருளாதார வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அவர்களின் மன வளத்தையும், உடல் உறுதியையும் மேம்படுத்தவும், ஒற்றுமையை வளர்த்திடவும், சுகாதாரத்தினை பேணி காக்கும் வகையிலும் கால்பந்து, கோகோ, கபடி, குழுக் கோலம் (ரங்கோலி) மற்றும் கயிறு இழுத்தல் ஆகிய பன்முக கலாச்சாரப் போட்டிகள் ஊராட்சி/வட்டாரம்/மாவட்டம் மற்றும் 8 மண்டல அளவில் நடத்தி முடிக்கப்பட்டன. குறிப்பாக கால்பந்து, கோகோ, கபடி போன்ற போட்டிகள் முதன்முறையாக சுய உதவிக் குழு மகளிரிடையே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக மாவட்ட / மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 24 மாவட்டங்களைச் சேர்ந்த 39 சுய உதவிக் குழுக்களில் உள்ள 400 மகளிர் பங்கு பெறும் கால்பந்து, கோகோ, கபடி, குழுக் கோலம் (ரங்கோலி) மற்றும் கயிறு இழுத்தல் ஆகிய போட்டிகள் சென்னை நேரு பூங்கா மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (9.4.2025) சென்னை, நேரு பூங்காவில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் முதன் முறையாக நடைபெறும் மாநில அளவிலான, மகளிர் சுய உதவிக் குழு மகளிருக்கான பன்முக கலாசாரப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி.சிங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிர் கலந்து கொண்டனர்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article