புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால், உடனடியாக ஐபிஎல் போட்டிகளை துவங்குவதற்கான வாய்ப்புகளை பரிசீலித்து வருவதாக, ஐபிஎல் தலைவர் அருண் துமல் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், கடந்த வாரம் இந்தியா – பாக். இடையே திடீரென போர் மேகங்கள் சூழ்ந்ததால் ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், இந்தியா – பாக். இடையே போர் நிறுத்தம் செய்யப்படுவதாக, நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஐபிஎல் தலைவர் அருண் துமல் அளித்த பேட்டியில், ‘போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஐபிஎல் போட்டிகளை உடனே துவக்குவது குறித்த வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். மீதமுள்ள போட்டிகளை நடத்தும் இடம், தேதி, நேரம் உள்ளிட்டவை குறித்து தக்க முடிவு எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக அரசுடனும் கலந்து பேச வேண்டி உள்ளது’ என்றார்.
இதற்கிடையே, ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று வரும், தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள், வரும் ஜூன் முதல் தங்கள் நாட்டு அணிகளுக்காக போட்டிகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால், இம்மாத இறுதிக்குள் ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தென் இந்தியாவில் உள்ள சென்னை, பெங்களூரு, ஐதராபாத் நகரங்களில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவது என்றும், ஒரு நாளைக்கு இரு போட்டிகள் நடத்த பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
வரும் 16ம் தேதி முதல் ஐபிஎல் மீண்டும் துவக்கப்படலாம் என்றும், புதிய அட்டவணை, 11ம் தேதி (நேற்று) இரவுக்குள் வெளியிடப்படலாம் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்ட அறிவிப்பு வெளியான பின்னர், பல வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் சென்றனர். அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளில் ஐபிஎல் அணி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post போர் மேகங்கள் கலைந்ததால் ஐபிஎல் போட்டிகள் விரைவில் துவக்கம்: ஒவ்வொரு நாளும் 2 போட்டிகள் appeared first on Dinakaran.