மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் மண்டூக முனிவருக்கு அழகர் சாப விமோசனம் அளிக்கும் முக்கிய நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்தனர். மதுரை சித்திரை திருவிழாவையொட்டி, அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் கடந்த 10ம் தேதி தங்கப்பல்லக்கில் புறப்பட்டு கூடல் மாநகரை வந்தடைந்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான அழகர் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று கோலாகலமாக நடந்தது.
இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர், பல்வேறு மண்டகப்படிகளில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மதுரை வண்டியூரில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு நேற்று இரவு 9 மணியளவில் அழகர் வந்தடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வீரராகவப் பெருமாள் கோயிலில் இன்று காலை 6 மணியளவில் அழகருக்கு திருமஞ்சனம் மற்றும் சைத்திரயோபசாரம் நடந்தது. பின்னர் ஏகாந்த சேவையில் உலர் திராட்சை மாலை, பாதாம் பருப்பு மாலை மற்றும் தாமரை மாலைகளை அணிந்தபடி எழுந்தருளிய அழகர், வீரராகவப் பெருமாள் கோயிலை வலம் வந்து அருள்பாலித்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் அழகரை மனமுருக தரிசனம் செய்தனர்.
பின்னர், கோயிலில் சிறப்பு பூஜைக்கு பிறகு, சேஷ வாகனத்தில் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோலத்தில் அழகர் அங்கிருந்து புறப்பட்டார். வண்டியூரில் வைகை ஆற்றின் மையத்தில் அமைந்துள்ள தேனூர் மண்டத்தில் எழுந்தருளினார். அங்கு பிற்பகல் 3 மணியளவில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக, தேனூர் மண்டகப்படி முன்பாக திருக்குளம் போன்று வடிவமைக்கப்பட்டு, தண்ணீர் நீரப்பப்பட்டிருந்தது. அதில் பூக்கள் தூவப்பட்டு மண்டூக முனிவரின் மண் சிலை வைக்கப்பட்டு, நாரை ஒன்றும் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் அழகர் சேஷ வாகனத்தில் இருந்து கருட வாகனத்தில் எழுந்தருளி நாரைக்கு முக்தி அளித்தார். இதையடுத்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு நாரை பறக்கவிடப்பட்டது. பின்னர் மண்டூக முனிவர் சிலைக்கு நம்மாழ்வார் திருமொழி பாடல் பாடப்பட்டு சாப விமோசனம் வழங்கும் பூஜை நடத்தப்பட்டது.
இதையடுத்து, தேனூர் மண்டகப்படியை வலம் வந்தபின் அழகர் அங்கிருந்து புறப்பாடானார். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் செம்புகளில் சர்க்கரை தீபம் ஏற்றி அழகரை வழிபட்டனர். இதையடுத்து, அனுமார் கோயிலில் அழகர் எழுந்தருள, அங்கு அங்கப்பிரதட்சணம் நடைபெற்றது. பின்னர். அழகர் மேளதாளம் முழங்க மதுரை ஆழ்வார்புரம், ராமராயர் மண்டபத்துக்கு புறப்பட்டார். அங்கு இரவு 10 மணியளவில் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதையடுத்து விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி உள்ளிட்ட தசாவதாரங்களில் அழகர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
விழாவில் நாளை (14ம் தேதி) காலை 6 மணியளவில் மோகினி அவதாரத்தில் வீதியுலா வரும் அழகர், பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் ராஜாங்க கோலத்தில் எழுந்தருள்கிறார். தொடர்ந்து 15ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி, அதிகாலை 2.30 மணிக்கு கள்ளழகர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதே திருக்கோலத்தில் தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் சன்னதியில் வையாழி ஆனவுடன் அங்கிருந்து மலைக்கு புறப்படுகிறார். 16ம் தேதி அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் இருப்பிடம் சென்றடைகிறார். 17ம் தேதி உற்சவ சாந்தியுடன் அழகர்கோயில் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.
The post மதுரை சித்திரை திருவிழாவில் மண்டூக முனிவருக்கு அழகர் சாப விமோசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.