
ரோம்,
உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர், போப் ஆண்டவர்(வயது 88), உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந்தேதி உயிரிழந்தார். போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் இறுதிச்சடங்கு 26-ந்தேதி(சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
இறுதிச்சடங்கிற்கு முன் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக போப் பிரான்சிஸ் உடல் ரோம் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நேற்றைய தினம் சுமார் 8 மணி நேரத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதற்காக புனித பீட்டர் தேவாலயம் இரவு முழுவதும் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து, மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு விடிய விடிய அஞ்சலி செலுத்தினர்.
போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.