
கொச்சி,
பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் தீவிரவாதியாக நடித்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் நடித்திருந்தார். தெலுங்கில் வெளியான தசரா படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர். அவ்வப்போது பரபரப்பான செய்திகளில் அடிபடும் சாக்கோ சில வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்பில் போதைப் பொருள் பயன்படுத்தினார் என்று கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் மீது மலையாள நடிகை ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்து இருந்தார்.சூத்ரவாக்கியம் படத்தின் படப்பிடிப்பின்போது, ஷைன் டாம் ஷாக்கோ போதையில் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக மலையாள நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக பிலிம் சேம்பர் மற்றும் உள் புகார்கள் குழுவிடம் புகாரும் அளித்து இருந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஷைன் டாம் சாக்கோ.
கொச்சியில் உள்ள ஓட்டலில் போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை தேடி போலீசார் இரவில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அப்போது ஷைன் டோம் ஷாக்கோ, தங்கியிருந்த ஓட்டலில் இருந்து தப்பி ஓடும் காட்சிகள் வெளியானது. அதிகாரிகள் வருவதை முன்கூட்டியே அறிந்து அவர் தப்பியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஓட்டலின் ஜன்னல் வழியே வெளியேறி அவர் தப்பி ஓடும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஷாக்கோ தங்கியிருந்த ஓட்டல் அறையில் போதைப்பொருள் எதுவும் சிக்கவில்லை. ஷாக்கோவுடன் தங்கியிருந்த பெண் ஒருவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் விசாரணை நடத்திய போது தப்பி ஓடியது பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ என தெரியவந்தது. இதனை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் உறுதிப்படுத்தினர். இவர் ஏன் போலீசாரை கண்டு தப்பி ஓடினார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அவருக்கு நோட்டீசு அனுப்பி விசாரணைக்கு அழைக்கவும் கொச்சி போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி கூறுகையில், ஒட்டலில் இருந்து வெளியேறியது ஏன்? என்பது குறித்து நடிகர்ஷைன் டாம் சாக்கோவிடம் விசாரிக்க உள்ளோம். விசாரணையின் ஒரு பகுதியாக ஓட்டல் ஊழியர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்படும் என்றார். சர்ச்சையில் சிக்கி உள்ள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், கேரளாவின் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் அம்மா அமைப்பு நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது நடவடிக்கை எடுக்க அவசர கூட்டத்தை கூட்டத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.