கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அதிமுக ஆட்சியின்போது 8க்கும் ேமற்பட்ட இளம்பெண்களை வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்த பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகிய 5 பேர் கடந்த 2019-ம் ஆண்டும், ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் (32) ஆகிய 4 பேர் கடந்த 2021-ம் ஆண்டும் கைது செய்யப்பட்டனர். கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில், 50-க்கும் மேற்பட்ட அரசுத்தரப்பு சாட்சியங்கள், சுமார் 200 ஆவணங்கள், 40 மின்னணு தரவுகள் உள்பட பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் விசாரணைக்கு சேர்க்கப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் 8 பேர், விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர். இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை கோவை சிபிஐ நீதிமன்றத்தில், நீதிபதி ஆர்.நந்தினிதேவி முன்னிலையில் நேற்று நடந்தது. இவ்வழக்கில், பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கவுதம், மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜா ஆகியோர் நேற்று கோர்ட்டில் சாட்சியம் அளித்தனர். இதையடுத்து, இவ்வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) மீண்டும் நடைபெறும் என நீதிபதி ஆர்.நந்தினிதேவி அறிவித்தார்.
The post பொள்ளாச்சி பாலியல் வழக்கு; எஸ்.ஐ, ஆர்எம்ஓ சாட்சியம்: இன்று மீண்டும் விசாரணை appeared first on Dinakaran.