பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி; அவமான ஆட்சிக்கு அதிமுகவே சாட்சி - மு.க.ஸ்டாலின் சாடல்

4 hours ago 2

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதியாக இருந்தது. அதிமுக ஆட்சியில் பெண்கள் வாழும் மாநிலமாக தமிழகம் இருந்தது. தமிழ்நாடு காவல்துறையில் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலை, கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது என்று கூறினார்.

இதற்கு பதிலளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

திமுக ஆட்சியில் எந்த வழக்காக இருந்தாலும் விரைந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிறப்பான ஆட்சியை எதிர்க்கட்சி தலைவர் குறை சொல்வது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை. கடந்த 4 ஆண்டுகளில் குற்றங்கள் குறைந்துள்ளன. காவல்நிலைய மரணங்கள் இல்லை. அதிமுக ஆட்சியின் அவலங்களை மக்கள் கண்ணீருடன் புலம்புகிறார்கள். திமுக ஆட்சியில் 3,640 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் என்பது சூழ்நிலைக்கு தகுந்ததுபோல தான் நடவடிக்கை எடுக்க முடியும்.

சென்னையில் குறுகிய காலத்தில் 2.5 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதிமுக ஆட்சியில் கண்காணிப்பு கேமராக்கள் மட்டுமே வைத்தார்கள். திமுக ஆட்சியில் கண்காணிப்பு கேமராக்களை பராமரித்து சரியாக செயல்பாட்டில் வைத்து உள்ளோம். கொலை வழக்கில் 95.2 சதவிகிதம், கொள்ளை வழக்கில் 98.4 சதவிகிதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 15,899 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி; அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி. சாமானிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு சாத்தான்குளமே சாட்சி; துயரமான ஆட்சிக்கு தூத்துக்குடியே சாட்சி; ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ள தமிழகத்தின் உரிமைகளை அடகுவைத்த ஆட்சி அதிமுக. சட்டம்-ஒழுங்கை பற்றி பேச அதிமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article