
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த 'விண்ணைதாண்டி வருவாயா' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து 'பானா காத்தாடி, நீதானே பொன் வசந்தம், அஞ்சான்' என பல படங்களில் நடித்து பிரபலமானார்.அதனை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார் சமந்தா. ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு கிடைக்காமலே இருந்தது. அந்த சமயத்தில் 2014-ம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து, விஜய்யுடன் இணைந்து 'தெறி, மெர்சல்' என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
கடைசியாக தமிழ் சினிமாவில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்த போதிலும் சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார். அப்பாவின் மறைவு, மயோசிடிஸ் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது சினிமா பக்கம் திரும்பியுள்ளார். அதற்கு முன்னதாக பாலிவுட்டில் வெப் சீரிஸ்களில் நடித்து வந்தார்.
நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

இந்நிலையில் நடிகை சமந்தாவுக்கு நடிகை திரிஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். "நீ நீயாகவே இரு. ஏனென்றால் இந்த உலகிற்கு உன்னைப் போன்ற நன்மைகள் மிகவும் அவசியம்" என்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வாழ்த்தியுள்ளார்.
38வது பிறந்தநாளை கொண்டாடும் சமந்தாவிற்கு, திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை சோசியல் மீடியா மூலம் தெரிவித்து வருகிறார்கள்.