
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இன்று வரை 2,90,678 மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:-
கடந்த மாதம் 7-ந்தேதி அன்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பப்பட்டது. இன்று மாலை 6 மணி நிலவரப்படி 2,90,678 மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். இதில் 1,27,337 மாணவர்களும், 1,05,395 மாணவிகளும் ஆக மொத்தம் 2,32,732 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர்.
இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, வரும் 6-ந்தேதிக்குள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் பொறியியல் சேர்க்கைக்கான தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விண்ணப்ப பதிவு செய்த மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை 9-ந்தேதிக்குள் பதிவேற்றம் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மாணவர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் 110 தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேரக்கை சேவை மையங்கள் (TFC Centres) நிறுவப்பட்டுள்ளன. அந்த சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம் மற்றும் 1800 425 0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.