
காதல் திருமணம் செய்ததால் 21 ஆண்டுகளாக பழ.கருப்பையா என்னை சாதிய வன்கொடுமை செய்கிறார் என இயக்குநர் கரு.பழனியப்பன் போலீசில் புகாரளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்தவர் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன். சென்னையில் வசித்து வருகிறார்.
இவரது தந்தையின் மூத்த சகோதரர்தான் மூத்த அரசியல்வாதியான பழ.கருப்பையா. இவர் தன்னை சாதிய வன்கொடுமைக்கு ஆளாக்குவதாக கரு.பழனியப்பன், டி.எஸ்.பி. பார்த்திபனிடம் நேற்று புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளதாவது:-
நான் 2004-ல் காதல் திருமணம் செய்து கொண்டேன். திருமணம் நடப்பதற்கு 2 மாதங்களுக்கு முன், என் தந்தை சின்னகருப்பையாவின் அண்ணனும், எங்கள் குடும்பத்தின் மூத்தவருமான பழ.கருப்பையா என்னை அழைத்து வேறு சமூகத்தில் காதல் திருமணம் செய்யக்கூடாது என்றார்.
மீறி செய்தால் குடும்பத்திற்குள்ளும், சுற்றத்தார்களுக்குள்ளும் என்னை தனிமைப்படுத்தி விடுவதாக மிரட்டினார். என் வீட்டாரின் சம்மதம் இருந்ததால் காதல் திருமணம் செய்து கொண்டேன். கடந்த 21 வருடமாக என் குடும்பம் மற்றும் உறவினர்களைச் சேர்ந்த எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளுக்கும் என்னை அழைக்கக் கூடாது என அந்த நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
சுய சாதிக்குள் திருமணம் செய்ய மறுத்து என் விருப்பத்திற்கு காதல் திருமணம் செய்த என்னை தனிமைப்படுத்தி வீண் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதுதான் அவரது நோக்கம். 21 ஆண்டுகளாக என்னை தனிமைப்படுத்தும் நோக்கில் சாதிய வன்கொடுமையை இன்று வரை தொடர்ச்சியாக பலவிதங்களில் பல நிகழ்வுகளில் செய்து வருகிறார்.
வருகிற 29-ம் தேதி கண்டரமாணிக்கத்தில் நடக்கவுள்ள சதாபிஷேக விழாவிற்கு என்னை அழைக்க கூடாது என விழா நடத்துபவர்களுக்கு பழ.கருப்பையா அழுத்தம் கொடுத்துள்ளார். எங்களது காரைக்குடி பூர்வீக வீட்டில் ஐந்தில் மூன்று பங்கு வைத்திருக்கும் என்னை அடிப்படை வசதிகள் செய்து கொள்வதற்கும் சேதமடைந்த பகுதிகளை செப்பனிடுவதை தடுக்கவும் பழ.கருப்பையா பல இன்னல்களை கொடுத்து வருகிறார்.
பழ.கருப்பையா சாதிய வன்கொடுமை செய்து வருவதிலிருந்து தடுக்கவும், எனக்கு பாதுகாப்பு வழங்கவும், அதனையும் மீறி தொந்தரவு கொடுத்தால் அவர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.