
புதுடெல்லி,
வந்தே பாரத் ரெயிலுக்கான முன்பதிவு நேற்றே தொடங்கிவிட்டது. கட்ரா - ஸ்ரீநகர் இடையே தினமும் 2 வந்தே பாரத் ரெயில்களை பகல் நேரத்தில் 4 முறை இயக்க வடக்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் இருப்பதைப்போன்று இருக்கை வசதி, எக்சிகியூட்டிவ் இருக்கை வசதி வந்தே பாரத் ரெயிலில் உள்ளது. இருக்கை வசதிக்கு ரூ.715 என்றும், எக்சிகியூட்டிவ் இருக்கைக்கு ரூ.1,320 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் வந்தே பாரத் ரெயில் (வண்டி எண் 26401) நாளை காலை 8.10 மணிக்கு கட்ராவில் இருந்து புறப்படுகிறது. இந்த ரெயில் 11.08 மணிக்கு ஸ்ரீநகரை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் ஸ்ரீநகரில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மாலை 4.58 மணிக்கு கட்ராவை வந்தடைகிறது. பராமரிப்பு பணிக்காக, வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் இந்த ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. மற்றொரு வந்தே பாரத் ரெயில் (26403) தினமும் கட்ராவில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு மாலை 5.53 மணிக்கு ஸ்ரீநகரை சென்றடைகிறது. பிறகு, மறுநாள் காலை ஸ்ரீநகரில் இருந்து காலை 8 மணிக்கு கட்ரா நோக்கி புறப்படுகிறது. பராமரிப்பு பணிக்காக, இந்த ரெயிலின் சேவை புதன்கிழமைகளில் ரத்து செய்யப்படுகிறது.
சுமார் 3 மணி நேர பயணத்தின்போது, இந்த 2 வந்தே பாரத் ரெயில்களும் பனிகலில் மட்டும் நின்று செல்லும். கூடுதல் ரெயில் நிலையங்களில் நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
பயணத்தின்போது, பயணிகளுக்கு சில உள்ளூர் உணவு வகைகளுடன் சைவ உணவு வழங்கப்படும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மேலும், தமிழ்நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்கள் போல் அல்லாமல், ஜம்மு-காஷ்மீரில் இயக்கப்படும் ரெயில்கள் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பனி மழை பொலியும் குளிர்ச்சியாக பகுதி என்பதால், கடுமையான குளிரில் தண்ணீர் மற்றும் பயோ-டாய்லெட்டுகள் உறைவதைத் தடுக்க, உறைபனி எதிர்ப்பு தொழில்நுட்பத்துடன் ரெயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, இங்குள்ள வந்தே பாரத் ரெயில்களில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது போல், அங்குள்ள ரெயில்களில் மிதவெப்பசாதன வசதி செய்யப்பட்டுள்ளது. அதனால், வெளியே கட்டுக்கடங்காத குளிர் இருந்தாலும், ரெயிலின் உள்ள வெதுவெதுப்பாக இருக்கும். இந்த வந்தே பாரத் ரெயில் வழித்தடத்தில்தான் கீர் பவானி கோவில், மார்தண்ட சூரிய கோவில் மற்றும் அமர்நாத் யாத்திரைக்கான பகுதி ஆகியவை வருவதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என்று வடக்கு ரெயில்வே கருதுகிறது.
2 வந்தே பாரத் ரெயில்களிலும் நாளை (சனிக்கிழமை) பயணத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. தொடர்ந்து வரும் நாட்களுக்கும் குறைவான டிக்கெட்டுகளே உள்ளன. இந்த 2 வந்தே பாரத் ரெயில்களிலும் உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் என்ற சிறப்பை பெற்ற செனாப் பாலத்தில் 1,315 மீட்டர் தூரம் பயணிக்க இருக்கிறது. இமயமலையின் 2 பகுதிகளுக்கு இடையே செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரெயில் 100 கி.மீ. வேகத்தில் செல்லும்போது, ஏதோ மலைகளுக்கு இடையே பறப்பது போன்ற உணர்வை பயணிகள் பெற முடியும் என்று வடக்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வந்தே பாரத் ரயில் சேவையால் இரு நகரங்களுக்கும் இடையேயான பயண நேரம் சுமார் 3 மணி நேரம் வரை குறையும்.