
தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ.3,550 ஆக உயர்த்தி வழங்கியுள்ள, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு, தமிழகக் கரும்பு விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 2015-16 ஆண்டுகளில் ரூ.2,300 ஆக இருந்த விலையை, கடந்த பத்து ஆண்டுகளில் ரூ.1,250 அதிகரித்து வழங்குகிறது நமது மத்திய அரசு.
ஆனால், தனது 2021 தேர்தல் அறிக்கையில், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4,000 வழங்கப்படும் என்று பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., நான்கு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இன்று வரை கரும்பு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.2,850 வழங்கியது மத்திய அரசு. மீதமுள்ள ரூ.1,150 விலையை சேர்த்து, விவசாயிகளுக்கு ரூ.4,000 ஆக தி.மு.க. அரசு வழங்கும் என்று ஒவ்வொரு ஆண்டும் தமிழக அமைச்சர்கள் பொய் கூறிக் கொண்டிருந்தார்கள்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, ரூ.4,000 வழங்குவதாகக் கூறியது தி.மு.க. அரசு. தற்போது மத்திய அரசு கரும்பு ஒரு டன்னுக்கு, ரூ.3,550 வழங்குகிறது. இதனுடன் அந்த ரூ.1,150 சேர்த்து, ஒரு டன்னுக்கு ரூ.4,700 ஆக, கரும்பு விவசாயிகளுக்கு தி.மு.க. அரசு வழங்குவதுதான் நியாயம்.
ஒவ்வொரு ஆண்டும் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து தமிழக விவசாயிகளை ஏமாற்றி வரும் தி.மு.க. அரசு, இதற்கு மேலும் தமிழக விவசாயிகளை ஏமாற்ற முயற்சிப்பது நடக்காது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.