
சென்னை,
சிஎம்டிஏ, இந்து சமய அறநிலையத்துறை, நெடுஞ்சாலைத் துறை, வேளாண் துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட வெவ்வேறு துறைகளில் 615 தொழில்நுட்ப பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி-ன் அதிகாரபூர்வ இணையதளத்தின் வாயிலாக விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மே மாதம் 27 ஆம் தேதி முதல் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஜூலை 25 ஆம் தேதி கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. பொறியியல் மற்றும் எம்எஸ்சியில் குறிப்பிட்ட பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: -
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) – 2025, உதவிப் பொறியாளர் (அமைப்பியல், மின்னியல், வேளாண் பொறியியல்) உள்ளிட்ட 47 பதவிகளுக்கான 615 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)க்கான அறிவிக்கை, தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி 21 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் 27.5.2025 முதல் 25.6.2025 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
தேர்வர்கள் தோ்வுக்கான கட்டணத்தை 'யுபிஐ' செயலி மூலம் செலுத்தலாம். கணினி வழித் தேர்வு 4.8.2025 முதல் 10.8.2025 வரை நடைபெறும். தொடர்ச்சியாக 11-ஆவது முறையாக தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்ட தேதியில் தேர்விற்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் தவறாமல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுகள் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) 2024-ஆம் ஆண்டு அறிவிக்கையில், இரண்டு நிதியாண்டுகளுக்கான 1,236 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதாவது, ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 618 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 2025-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) மூலம், ஒரு நிதியாண்டிற்கு (2025-2026) 615 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 2025-ஆம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, அரசுத் துறை மற்றும் நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.