டெல்லி: பொன்னியின் செல்வன் 2 படப் பாடல் வழக்கில் ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் இடம்பெற்ற “வீரா ராஜ வீரா” பாடல், தன்னுடைய தந்தை மற்றும் தாத்தா ஆகியோரின் “ஷிவ ஸ்துதி” பாடலை தழுவி எடுக்கப்பட்டது என்றும், இப்பாடலை பயன்படுத்தியதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என்றும் பாடகர் பயாஸ் வாசிபுதீன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பிரதீபா சிங், ‘வீர ராஜா வீர’ பாடல் சில மாற்றங்களுடன் ‘சிவ ஸ்துதி’ பாடலின் இசையை அடிப்படையாகக் கொண்டோ அல்லது அதிலிருந்து ஈர்க்கப்பட்டோ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏ.ஆர்.ரகுமான் நீதிமன்ற பதிவாளரிடம் ரூ.2 கோடி செலுத்தவும், மனுதாரருக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த குற்றச்சாட்டை மறுத்த ஏ.ஆர்.ரகுமான் தரப்பு, “ஷிவ ஸ்துதி” என்பது துருபத் வகையை சேர்ந்த ஒரு பாரம்பரிய இசை என்றும், “வீரா ராஜ வீரா” பாடல் இந்துஸ்தானி பாரம்பரிய இசை என்றும், காப்புரிமைக்கு உட்பட்டதல்ல என்றும் வாதிட்டது.
இதையடுத்து இந்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஏ.ஆர்.ரகுமான், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிக்கு ரவிசங்கர் மற்றும் அஜய் திக்பால் ஆகியோர் அமைராவில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதி விதித்த ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
The post பொன்னியின் செல்வன் 2 படப் பாடல் வழக்கு.. ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை விதிப்பு!! appeared first on Dinakaran.