திருவாரூர்: பைக் மீது லாரி கவிழ்ந்ததில் தந்தை, மகன், மகள் உயிரிழந்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா வரகூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (35). விவசாய கூலித்தொழிலாளியான இவர், நேற்று காலை மகன் நிரோஷன் (7), மகள் சியாசினி (4) ஆகியோருடன் பைக்கில் மிளகாய்தூள் அரைப்பதற்காக அகர திருமாளம் பகுதியில் உள்ள மில் ஒன்றுக்கு சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
கோவில் திருமாளம் என்ற இடத்தில், பேரளம்- காரைக்கால் அகல ரயில் பாதை பணிக்காக கரூரில் இருந்து ஜல்லி ஏற்றி சென்ற லாரி சாலை வளைவில் திரும்பியது. எதிர்பாராதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் இடது புறமாக கவிழ்ந்ததில் இடையில் பைக் சிக்கிக்கொண்டது.
இதில் பைக்கில் சென்ற மோகன், அவரது மகன், மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். தகவல் அறிந்த எஸ்.பி கருண்கரட் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியை அகற்றி 3 பேர் உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய லாரி டிரைவர் விக்னேஷ் என்பவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post பைக் மீது லாரி கவிழ்ந்ததில் தந்தை, மகன், மகள் உயிரிழப்பு: திருவாரூர் அருகே சோகம் appeared first on Dinakaran.