பெரியபாளையம்: பெரியபாளையம் அடுத்த, சின்ன செங்காத்தாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (50). கூலித் தொழிலாளியான இவர் கடந்த 4ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் சுப்பிரமணியை காணவில்லை என பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து, பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று வடமதுரை கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் இயற்கை உபாதைக்காகச் சென்ற கிராம மக்கள், ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏரியில் மிதந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அவர் காணாமல் போன சின்ன செங்காத்தாகுளம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சுப்பிரமணி என்பதும், வடமதுரை ஏரியில் மீன்பிடிக்கச் சென்றபோது தவறி விழுந்து அவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து, உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண் சடலம் மீட்பு : திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஏரியில் பாதாள வினாயகர் கோயில் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியம் என்பவருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரியில் மிதந்துகொண்டிருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியம் திருவள்ளூர் தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? குடிபோதையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அடித்துக் கொன்று உடலை வீசிவிட்டுச் சென்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பெரியபாளையம் அருகே மீன் பிடிக்கச் சென்ற தொழிலாளி ஏரியில் தவறி விழுந்து சாவு appeared first on Dinakaran.