ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்து பென்னலூர், கடுவஞ்சேரி கிராமத்தில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட 2 குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், பென்னலூர் மற்றும் கடுவஞ்சேரி ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க புதிய நீர்தேக்க தொட்டிகள் அமைக்க ஊராட்சி மன்ற தலைவர்கள் சார்பில், ஹூண்டாய் கார் நிறுவனத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி, ஹூண்டாய் நிறுவன சமூக பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் இரண்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, பென்னலூர் ஊராட்சியில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியும், கடுவஞ்சேரி ஊராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியும் கட்டிமுடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தலைமையில், ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஒன்றிய குழு உறுப்பினர்கள் செந்தில்ராஜன், பரமசிவம், ஊராட்சி மன்ற தலைவர்கள் கல்பனா யுவராஜ், வசந்தா, சிவக்குமார் மற்றும் ஹூண்டாய் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post பென்னலூர், கடுவஞ்சேரியில் ரூ.1.60 கோடியில் குடிநீர் மேல்நிலை தொட்டிகள்:ஒன்றிய குழு தலைவர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.