பள்ளி, கல்லூரி சார்பில் போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

3 hours ago 1

திசையன்விளை : திசையன்விளை அருகே உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அணைக்கரை பங்கு, வள்ளியூர் பல்நோக்கு சமூக சேவை சங்கம் சார்பில் விழிப்புணர்வு முகாம், பேரணி நடந்தது. அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் அணைக்கரை, மிட்டாத்தார்குளம் பகுதியில் போதைக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தி பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மிட்டார்தார்குளத்தில் நடந்த விழிப்புணர்வு முகாமில் மாணவர்கள், பெற்றோர்களுக்கு அருட்தந்தை ரெக்ஸ், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசினார்.

இதைதொடர்ந்து வள்ளியூர் கல்வி மாவட்ட கல்வி அதிகாரி முத்துராஜ் தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

மானூர்: மானூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி போதை பொருள் ஒழிப்பு என்ற தலைப்பின் கீழ் கலை நிகழ்ச்சிகள், கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன.

மானூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் எஸ்ஐ, போலீசார், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்ற பேரணி மானூர் பஜாரில் நடைபெற்றது. இதை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ஜெயசீலி நன்றி கூறினார்.

சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் அருகேயுள்ள மேலநீலிதநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் புகையிலை மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் தங்கத்துரை தலைமை வகித்தார்.

பனவடலிசத்திரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு புகையிலை மற்றும் போதை பொருட்கள் உட்கொள்வதால் உடலில் உள்ள உறுப்புகள் பாதிக்கப்படுகிறது.

இதனால் குற்றச் செயலில் ஈடுபட்டு மாணவர்களுடைய வாழ்க்கை மற்றும் எதிர்காலம் பாழாகிறது. சமுதாயத்தில் இருந்து போதை பொருளை ஒழிக்க வேண்டும்.

அதை மாணவர்கள் நினைத்தால் தான் நடத்த முடியும். மாணவர்கள் படிக்கின்ற காலத்தில் ஒழுக்கத்துடனும் நற்சிந்தனையுடனும் படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான் பிற்காலத்தில் சமுதாயத்தில் முக்கிய மனிதர்களாக வர முடியும். எனவே நல்ல முறையில் படிக்க வேண்டும்’ என்றார்.

களக்காடு:நாங்குநேரி போதை மறுவாழ்வு மையம், சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் போதை பொருட்கள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் முத்துசாமி தலைமை வகித்தார். ஆசிரியர் தனசேகரன் வரவேற்றார்.

மாவட்ட போதை மறுவாழ்வு மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் பெர்னாட்ஷா, போதை பொருட்களை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார். நாங்குநேரி மகளிர் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி விழிப்புணர்வு பதாதைகள், ஸ்டிக்கர்களை வெளியிட்டார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட மது, போதை மறுவாழ்வு மைய ஆலோசகர் தனலெட்சுமி நன்றி கூறினார்.

முன்னதாக நாங்குநேரி மாவட்ட மது, போதை மறுவாழ்வு மையத்தில் டிஎஸ்பி பிரதாப் போதையில்லாத வாழ்க்கை குறித்த அறிவுரை வழங்கினார். இலவச சட்டக்குழு சார்பில் வக்கீல் மாரியப்பன், ரமேஷ், சுதாகரன், ஆனந்தகுமார் சட்ட உதவி குறித்து பேசினர்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ரெஜின்லெட், லெனின், மாணவர்கள், மாவட்ட மது போதை மறுவாழ்வு மைய இயக்குனர் சாந்தி, மெர்ஸி, சசிகலா, ஜூலியட், வானுமாமலை, வேலாயுதம் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post பள்ளி, கல்லூரி சார்பில் போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Read Entire Article