
ஆந்திராவில் உள்ள ஒரு கிராமவாசிகளுக்கு ஆந்திரா துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் காலணிகளை அனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள அரக்கு மற்றும் தும்ப்ரிகுடா பகுதிகளுக்கு பவன் கல்யாண் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் உள்ளூர் பிரச்சினைகளை தெரிந்து கொள்ள பெடபாடு கிராமத்திற்கு பவன் கல்யாண் சென்றார். அங்குள்ள மக்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, பாங்கி மிது என்ற வயதான பெண் காலணி இல்லாமல் இருப்பதைக் கண்டார். அந்த பெண் மட்டுமல்லாமல் கிராமத்தில் உள்ள பலரும் காலணி அணியாமல் வெறுங்காலுடன் இருப்பதை பவன் கல்யாண் கவனித்தார்.
இதில் மனவேதனை அடைந்த துணை முதல்வர் பவன் கல்யாண், கிராமத்தில் உள்ள 350 பேருக்கும், காலணிகளை வழங்கி விநியோகிக்குமாறு தனது அலுவலகத்திடம் உத்தரவிட்டார். அதன்படி, கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் காலணிகள் வழங்கப்பட்டது. இதில் பெரும் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள், துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.