
பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக இந்த ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 14 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பெங்களூரு தரப்பில் டிம் டேவிட் 50 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜான்சென், சாஹல், ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 96 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் 12.1 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 33 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது டிம் டேவிட்டுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டியில் கூறியதாவது, பல்வேறு வகைகள் தான் வாழ்க்கையின் ருசி என்று சொல்வார்கள். அதுபோல இந்த மைதானத்தில் நாங்கள் நிறையப் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளோம்.
அது நல்ல சவால். வித்தியாசமாக நான் எதுவும் சிந்திக்கவில்லை. எனது உள்ளுணர்வுகளை பின்பற்றி விக்கெட்டுகளை எடுக்க முயற்சி செய்தேன். புதிய பேட்ஸ்மேன் வந்து உடனடியாக செட்டிலாகி விளையாடுவதை நான் விரும்பவில்லை. மார்கோ யான்சென் பிட்ச்சில் எக்ஸ்ட்ரா பவுன்சை உருவாக்கி வேகமாக பவுலிங் செய்து எங்களுடைய வெற்றியை நிலை நிறுத்தினார். பவுலர்கள் அவருக்கு உதவி செய்தனர்.
பிட்ச் எப்படி இருக்கும் என்று தெரியாத நிலையில் எங்களுடைய பவுலர்கள் அதற்குத் தங்களை உட்படுத்திக் கொள்வார்கள் என்று நம்பினேன். கடினமான லென்த் பந்துகளை அடிப்பது கடினமாக இருப்பதாக அர்ஷ்தீப் என்னிடம் கூறினார். ஏனெனில், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நேராக சிக்சர் அடிக்க முடியவில்லை.
எனவே, அதை வைத்து நாங்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினோம். ஒரு பேட்ஸ்மேன் அதிரடியாக விளையாட வேண்டும். அதை இன்று எங்களுக்கு நேஹல் செய்தார். உயர்ந்த அணுகு முறையில் விளையாடிய அவர் இப்படியே தொடர்வார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.