
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் செல்வநாயகபுரம் நிலக்கோட்டையில் உள்ள திருமண மகாலில் அ.ம.மு.க.வின் முதுகுளத்தூர் தொகுதி செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகன் தலைமை தாங்கினார்.
மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் டேவிட் அண்ணாதுரை, தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு செயலாளர் ஜெசிமா பானு, மருத்துவ அணி செயலாளர் கபிலன், ஜெயலலிதா பேரவை துணை தலைவர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். தொடர்ந்து கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணியில் ஒன்றிணையும் என நம்புகிறேன். இதற்கும் எங்கள் கூட்டணி கட்சியினருடனான சண்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும்.
கூட்டணி பலப்பட வேண்டும் என்று நினைப்பவன் நான். முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பை பெற்றுத்தர வேண்டியது கட்சி தலைமையின் பொறுப்பு. தி.மு.க. என்ற தீய சக்தி வீழ்த்தப்பட வேண்டும். அதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளோம். எங்கள் கூட்டணி மேலும் வலுப்பெறும். இவ்வாறு அவர் பேசினார்.