
பெங்களூரு,
18வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி கடந்த 3ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தொடர்ந்து பெங்களூருவில் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோப்பையை வென்ற அணி வீரர்களைக் காண பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்துக்கு ஏராளமானோர் குவிந்தனர்.
இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், நிகழ்ந்த தவறுக்குப் பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் ஏ. சங்கர் மற்றும் பொருளாளர் ஜெய்ராம் ஆகியோர் இன்று தாமாக முன்வந்து தங்கள் பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், கடந்த இரண்டு நாட்களில் நடந்த எதிர்பாராத மற்றும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் காரணமாக நாங்கள் இருவரும் ராஜினாமா செய்துள்ளோம். ஜூன் 6, 2025 தேதியிட்ட இதற்கான கடிதத்தை கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவரிடம் அளித்துள்ளோம்.
இந்த அசம்பாவித சம்பவம் நிகழ்ந்ததில் எங்கள் பங்கு மிகவும் குறைவு என்ற போதிலும், தார்மீகப் பொறுப்பின் காரணமாக ராஜினாமா செய்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.