
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரரை கடத்தியது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடினர். இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பூவை ஜெகன்மூர்த்திக்கு உத்தரவிட்டார். அதேவேளையில் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கைது செய்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.அதன்படி, ஜெயராமிடம் விசாரணை நடத்திய போலீசார் விசாரணைக்கு பின்பு அவரை விடுவித்தனர். தனக்கு எதிராக பிறப்பிக்கப்படட உத்தரவை எதிர்த்து கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டார்.அதன்படி பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதி வேல்முருகனிடம் இருந்து நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
நேற்று அந்த முன்ஜாமீன் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் விசாரணையை தள்ளிவைக்க கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து, விசாரணையை இன்று (வெள்ளிக்கிழமை) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.