புளியங்குடி அருகே பரிதாபம் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி பலி

2 hours ago 2

புளியங்குடி : புளியங்குடி அருகே நீச்சல் குளத்தில் பெற்றோருடன் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே ரத்தனபுரியை சேர்ந்தவர் ராஜேந்திரன் – இசக்கியம்மாள் தம்பதி. ராஜேந்திரன் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு காவ்யா, கன்சிகா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். காவ்யா புளியங்குடி அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கன்சிகா ரத்தனபுரி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் ராஜேந்திரன், இசக்கியம்மாள் ஆகியோர் தனது மகள்கள், உறவினர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுடன் அருகிலுள்ள தனியார் நீச்சல் குளத்தில் குளிக்கச் சென்றனர்.

குழந்தைகள் ரப்பர் டியூப் மூலமாக நீச்சல் அடித்து உற்சாகமாக குளித்தவாறு இருந்தனர். அப்போது சிறுமி கன்சிகா திடீரென நீரில் மூழ்கினாள். இதனை குளித்துக் கொண்டு இருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து கன்சிகாவை தேடும் போது நீரில் மூழ்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு புளியங்குடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமி கன்சிகா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்ததையடுத்து புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்த புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீச்சல் குளத்தில் குளித்த சிறுமி பெற்றோர் கண் முன்பே நீரில் மூழ்கி பலியான சம்பவம் ரத்தனபுரி பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

The post புளியங்குடி அருகே பரிதாபம் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி பலி appeared first on Dinakaran.

Read Entire Article