2010-ல் திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கான தனது வியூகப் பயணத்தை கோவையிலிருந்து தான் தொடங்கினார் ஜெயலலிதா. அவரது வழியைப் பின்பற்றி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியும் ஆட்சிக்கு எதிரான தேர்தல் பரப்புரையை கோவையிலிருந்தே தொடங்குகிறார். 2006-11 திமுக ஆட்சியில் மின்வெட்டை கண்டித்தும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் 2010-ல் கோவை வஉசி மைதானத்தில் அதிமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்ற அந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜெயலலிதாவே தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை எடுத்துவைத்துப் பேசி அதிமுக தொண்டர்களுக்கு உத்வேகம் அளித்தார் ஜெயலலிதா. கோவையில் தொடங்கிய இந்தப் பயணத்தை மற்ற மாவட்டங் களுக்கும் விரிவுபடுத்திய அவர், இதை தேர்தல் பிரச்சாரப் பயணமாகவே மாற்றிக்கொண்டார். 2011-ல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததற்கு ஜெயலலிதாவின் மாவட்ட வாரியான இந்த ஆர்ப்பாட்டங்களே அடித்தளம் அமைத்தன.