*மாவட்ட ஆட்சியர் அறிவுரை
பண்ருட்டி : கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்திற்கு உட்பட்ட பண்ருட்டி, சிறுகிராமம் மற்றும் பெரியகாட்டுப்பாளையம் ஆகிய அரசு மேல்நிலை பள்ளிகளில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது 12ம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி என்ற இலக்கை அடைய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1562 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டில் 12ம் வகுப்பில் 75 சதவீதமும், 10ம் வகுப்பில் 86 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தற்போது 474 மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு பயின்று வருகின்றனர். கடந்த அரையாண்டு தேர்வில் 74 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறுகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி 12ம் வகுப்பில் 95 சதவீதமும் 10ம் வகுப்பில் 97 சதவீதமாகவும் உள்ளது.
அரையாண்டு தேர்வில் 81 சதவீதமாக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உள்ளது. பெரியகாட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்தாண்டில் 12ம் வகுப்பில் 87 சதவீதமும், 10ம் வகுப்பில் 100 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரையாண்டு தேர்வில் 71% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களின் வருகை பதிவேட்டின் அடிப்படையில் ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணித்து மாணவர்கள் இடைநிற்றலின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். பருவத்தேர்வு, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வின் தேர்ச்சி விகிதத்தை கணக்கில் கொண்டு, தேர்ச்சி குறைவாக உள்ள மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மாணவர்களுக்கு ஊக்கப்பயிற்சி அளித்து தன்முனைப்புடன் கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக அவர்களுக்கு மீளாய்வுக்கூட்டம் நடத்தி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்திட வேண்டும்.
மாணவர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். 12ம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கென ஒரு உயர்கல்வியை இலக்காக கொண்டு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும், என்றார். ஆய்வின்போது, முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், மாவட்ட கல்வி அலுவலர் துரைபாண்டியன், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
The post தங்களுக்கென ஒரு உயர்கல்வியை இலக்காக கொண்டு தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் மாணவர்கள் தேர்ச்சி பெறவேண்டும் appeared first on Dinakaran.