
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி அறிவித்தார்.
ரோகித்தை தொடர்ந்து விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து, எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு புதிய கேப்டன், ரோகித் மற்றும் விராட் கோலிக்கு சரியான மாற்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு பி.சி.சி.ஐ வந்துள்ளது.
இதனிடையே இந்திய டெஸ்ட் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ராவை கேப்டனாக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் கூறிவருகின்றனர்.
ஏனெனில் ரோகித் இல்லாத சூழலில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட பும்ரா இந்தியாவுக்கு அபார வெற்றியை தேடி கொடுத்தார். இருப்பினும் அவர் அடிக்கடி காயத்தை சந்திப்பதால் கேப்டன்சி வாய்ப்பில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்பட்டால் காயமடையும் சூழ்நிலைகளை அதிகமாகும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எச்சரித்துள்ளார். எனவே சுப்மன் கில் அல்லது ரிஷப் பண்ட் ஆகியோரில் ஒருவரை கேப்டனாக நியமிக்கலாம் என்றும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "என்னைப் பொறுத்த வரை ஆஸ்திரேலிய தொடருக்குப்பின் ஜஸ்பிரித் பும்ராதான் கேப்டனாக செயல்பட வேண்டிய தேர்வாகும். ஆனால் அவர் கேப்டனாக இருப்பதை நான் விரும்பவில்லை. ஏனெனில் பும்ராவை கேப்டனாக நியமித்தால் அவரை ஒரு பவுலராக நீங்கள் இழந்து விடுவீர்கள். அவர் தனது உடலை ஒரு சமயத்தில் ஒரு போட்டிக்கு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
தற்போது மிகவும் மோசமான காயத்திலிருந்து அவர் கம்பேக் கொடுத்துள்ளார். தற்போது ஐ.பி.எல். தொடரில் விளையாடும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து 10 -15 ஓவர்கள் வீச வேண்டும். அவ்வாறு வீசும் போது கேப்டன்ஷிப் அழுத்தம் அவருடைய மனதில் பாதிப்பை உண்டாக்கும். எனவே நீங்கள் சுப்மன் கில் போன்றவரை வளர்க்கலாம். 25, 26 வயதைக் கொண்டுள்ள அவருக்கு வாய்ப்புகளையும் நேரத்தையும் வழங்குங்கள்.
ரிஷப் பண்ட்டும் அதை செய்வதற்கு சரியானவர். இந்த இருவருமே கேப்டனாக செயல்படத் தகுதியானவர்கள். ஏனெனில் அவர்களிடம் வயதும் திறமையும் உள்ளது. அவர்கள் கற்றுக் கொள்வார்கள். ஐ.பி.எல். தொடரில் கேப்டனாக செயல்பட்டுள்ளதால் அவர்களிடம் ஓரளவு நல்ல அனுபவம் உள்ளது. நான் பார்த்ததில் சுப்மன் கில்லின் கேரக்டர் சுவாரஸ்யமாக இருக்கிறது. அமைதியான, அவரிடம் எல்லா குணங்களும் உள்ளன" என்று கூறினார்.