புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாஜகவைச் சேர்ந்த ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல் நியமன எம்எல்ஏக்களான வி.பி ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோரும் பதவியை ராஜினாமா செய்தனர். பாஜ எம்எல்ஏக்களில் சிலர் சுழற்சி முறையில் அமைச்சர் பதவி தர வேண்டும் எனவும் முக்கிய நிர்வாகிகளுக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியதால் இந்த மாற்றம் நடந்தது.இந்த நிலையில் புதிய அமைச்சராக பாஜவை சேர்ந்த ஜான்குமாரை பரிந்துரைத்து கவர்னர் கைலாஷ்நாதனிடம் முதல்வர் ரங்கசாமி கடிதம் அளித்தார். இதேபோல் 3 புதிய நியமன எம்எல்ஏக்களாக பாஜவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து புதிய அமைச்சராக ஜான்குமார் நியமிப்பதற்கான ஒப்புதல் கடிதம் தலைமை செயலருக்கு வந்துள்ளது. அதேபோல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலர் பிரவீன்குமார் ராஜியிடமிருந்து தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் 3 நியமன எம்எல்ஏக்களான அதிகாரப்பூர்வ ஒப்புதல் கடிதம் நேற்று கவர்னர், தலைமை செயலகத்துக்கு வந்தது. இதையடுத்து அமைச்சர் ஜான்குமாரும், 3 நியமன எம்எல்ஏக்களும் வருகிற 14ம்தேதி பதவியேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஜான்குமாருக்கு கவர்னர் கைலாஷ்நாதன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதேபோல் 3 நியமன எம்எல்ஏக்களுக்கு சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் செல்வம், பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
The post புதுச்சேரியில் புதிய அமைச்சராக ஜான்குமார் வருகிற 14ம்தேதி பதவியேற்கிறார்: 3 நியமன எம்எல்ஏக்களும் ெபாறுப்பேற்பு appeared first on Dinakaran.