உங்களிடம் உள்ள மற்ற திறமைகளைக் காட்டிலும் நீங்கள் கட்டாயம் பெற்றிருக்க வேண்டியதும் வளர்த்துக்கொள்ள வேண்டியதும் ஆக்கத்திறன் ஆகும். அது புதிய கருத்துக்களைத் தோற்றுவிக்கிற புதுமைகளை உருவாக்குகிற திறன். ஆக்கத்திறன் புதிய வழிகளைக் கண்டுபிடிக்கிறது, புதிய செயல்முறைகளைக் கொண்டு வருகிறது.உங்கள் கற்பனை வளத்தைப் பயன்படுத்தியே புதியனவற்றை நீங்கள் உருவாக்க முடியும். உங்களுடைய கற்றுணரும் திறமைகளும், பன்முக அறிவு நுட்பமும் உங்களை ஆற்றல் மிக்க மேதை ஆக்கிவிடும். தொழில் துறையில் உள்ள வெற்றியாளர்கள் பலரும் தொடர்ந்து புதிய, சிறந்த யோசனைகளையும், புதிய சிறந்த செயல்முறைகளையும் கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதை நிகழ்த்த முடிகிற ஒவ்வொருவருமே தங்களுடைய சொந்த செயல்முறையில் நேர்த்தியானவராகி விட முடியும்.புதிய சிந்தனையுடன், புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு துணிவு மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் அத்தகைய துணிச்சல் இல்லாததால் பலரால் சாதிக்க முடிவதில்லை, ஆனால் புதிய சிந்தனைகளை துணிச்சலுடன் செயல்படுத்தி புதிய வெற்றியை பெறுபவர்கள் இந்த உலகில் சாதனையாளர்களாக திகழ்கின்றார்கள்.
இரண்டு விதைகள் ஒன்றுக்கொன்று பக்கமாய் நிலத்தில் விழுந்து கிடந்தன. முதலாவது விதை நல்ல வளர்ச்சி பெற்று, மரமாகி நிறைய பழங்களை தர வேண்டும் என்று விரும்பியது. அந்த சிறிய விதை நம்பிக்கையுடன் வேர்விட்டது.தனக்கு தேவையான தண்ணீரையும், சத்துக்களையும் அவ்விதமாய் அதைத் தேடி பெற்றது. அந்த வேர்களால் நிலைப்புத் தன்மை கொண்ட செடி மரமாக வளர்ந்தது.தான் நினைத்தபடியே பலருக்கும் காய்கனிகளை வழங்க முடிந்தது.இரண்டாவது விதைக்கும் வாழ்வது குறித்த ஆசை இருந்தது. ஆனால் கூடவே அச்சமும் இருந்தது. நம்மால் பாறைக்கற் களையும், புழுக்களையும் மீறி வேறு விட முடியுமா என்று அஞ்சியது. நிலத்தைப் பிளந்து கொண்டு முளை விடுவதிலும் அதற்கு சிரமம் தெரிந்தது. அப்படியே முளைத்து எழுந்தாலும் யாருடைய கால்பட்டோ அல்லது சூரியனின் கடுமையான வெப்பம் தாங்காமலோ சிதைந்து விடுவோம் என்றும் அது சந்தேகப்பட்டது.இது ரொம்ப துணிச்சலான சமாச்சாரம் என்று அந்த இரண்டாவது விதை நினைத்தது. இப்போதைக்கு முடங்கிக் கிடப்பதே பாதுகாப்பு என்று முடிவு கட்டியது. ஆனால்,என்ன ஆயிற்று தெரியுமா? அதே நாள் காலையில் கோழி ஒன்று மண்ணைச் கிளறி அந்த விதையைத் தின்றுவிட்டது.
புதிய சிந்தனைகளை செயல்படுத்தக்கூடிய துணிவு இல்லாதவர்கள் அடையக் கூடியது எதுவும் இல்லை. ஆனால் புதிய சிந்தனையுடன் வாழ்க்கையை தன் விருப்பப்படி வாழ விரும்புபவர்கள் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள். இதற்கு உதாரணமாய் புதிய சிந்தனைகளுடன் புதிய முயற்சிகளை செய்து கொண்டிருக்கக் கூடிய இந்த சாதனை மங்கையை சொல்லலாம்.நெகிழி எனப்படும் பிளாஸ்டிக்கின் கண்டுபிடிப்பு ஒரு காலத்தில் வரம் எனக் கொண்டாடப்பட்டது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அதுவே பூமிக்கான சாபம் என்ற நிலை உருவாகிவிட்டது. வீணாக கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் லேசில் அழிவதில்லை, பூமிக்குள் நீர்ஊடுருவும் தன்மையைக்
குறைக்கின்றன. வனங்களில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்ளும் வனவிலங்குகள் பரிதாபமாக உயிரிழக்கின்றன.நீர் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுத்துகின்றன. எரிக்கும்போது இவை வெளியிடும் நச்சுப்புகை பல வித வியாதிகளையும் கொடுத்து விடுகின்றன. உணவு சங்கிலியை பாதிக்கின்றன. சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு முக்கியமான காரணங்களாக அமைகின்றன. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். பிளாஸ்டிக்கின் தீமைகளை. அதே சமயம் பிளாஸ்டிக் நமது அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகவும் மாறிப் போய்விட்டிருக்கிறது. என்னதான் தீர்வு! இது குப்பையல்ல, பொக்கிஷம் என்று பிளாஸ்டிக்கை மறுசுழற்சிக்கு ஆளாக்கி, பயனுள்ள பொருளாக மாற்றும் வித்தையை செய்து வருகிறார் சாரா லகானி என்ற 22 வயது பெண்.
22 வயதே நிரம்பிய இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் கான்பூரை சேர்ந்தவர். பிளாஸ்டிக்கை கொண்டு ஆடைகளை வடிவமைத்து, ஆரோக்கியமான புரட்சி ஒன்றை அமைதியாக செய்து வருகிறார். ஒரு முறையே பயன்படுத்தப்பட்டு வீசப்படும் பிளாஸ்டிக்தான் இவரின் முக்கிய இலக்கு.பிளாஸ்டிக்கால் விளையும் தீமைகளை நன்கு உணர்ந்தவராக இருந்தார் சாரா. இவரது தந்தை பார்மசி தொழிலில் ஈடுபட்டு வந்தார். பிளாஸ்டிக் கழிவுகளை தீயிட்டுக் கொளுத்துவதால் ஏற்படக்கூடிய தீமையைப் பற்றி அவர் தந்தை அடிக்கடி சாராவுக்கு சொல்வதுண்டு. எனவே தீமை தரும் இந்த பிளாஸ்டிக்கை எப்படியாவது பயனுள்ள பொருளாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தீவிரமானது. பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யும் பணியில் இறங்கினார் சாரா.
ஆரம்பத்தில் இந்த முயற்சிக்கு இவருக்கு பல சவால்கள் இருந்தன. பேர்ல் அகாடமியில் அவர் பயின்றபோது இறுதி ஆண்டு பிராஜக்ட் ஒர்க்குக்காக பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வதை எடுத்துக் கொண்டார். தனது படைப்பாற்றல் திறனையும், சூழல் பாதுகாப்பு உணர்வையும் கலந்து இந்த முயற்சிகளை அவர் மேற்கொண்டார்.லாக்மே நிறுவனம் பேஷன் டிசைனிங் கவுசில் ஆப் இந்தியா உடன் இணைந்து நடத்திய நிகழ்ச்சிதான் லாக்மே பேஷன் வீக். இதில் உலகளாவிய ஆடை வடிவமைப்புப் பயிற்சியகங்களில் இருந்து மாணவ மாணவிகள் குவிந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்து, இவர் செய்த ஆடைகளை பார்த்த பார்வையாளர்கள் அசந்து விட்டனர். சாராவின் தொலைநோக்கு பார்வை பலராலும் பாராட்டப்பட்டது.சாரா தற்போது மஃப்டி என்னும் பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் இளநிலை வடிவமைப்பாளராக பணியாற்றுகின்றார். இங்கே தனது படைப்பாற்றலை அதிகமாக வளர்த்துக் கொள்வதிலும் ஈடுபடுகிறார். எம்பிராய்டரி தொழிலில் விற்பன்னர்களாக இருப்பவர்களுடன் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டு பல நுணுக்கங்களையும் கற்று வருகிறார்.
பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யும் மும்பை, குஜராத் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த வர்த்தகர்கள் பலருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அவர்களிடம் இருந்து பெரிய அளவில் பிளாஸ்டிக் கழிவுகளை பெற்று, ஆடைகளாக மாற்றிக் கொண்டிருக்கிறார் சாரா.இவர் தயாரிக்கும் ஆடைகள் பெரும்பாலும் சுடிதாரின் துப்பட்டாக்கள், காற்சட்டைகள் போலப் பெண்கள் அன்றாடம் உபயோகிக்க ஏற்றவையாக இருக்கின்றன. எல்லோராலும், எந்தச் சமயத்திலும் எந்த இடத்திலும் அணிவதற்கு உரியன அவை. இவரது லட்சியம் தனக்கு சொந்தமாக நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி தொழில் முனைவராக சாதித்து புதிய படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மாணவர்களுக்கு சொன்னது என்னவென்றால் மாணவர்கள் தங்கள் கற்ற கல்வியின் மூலமாக அறிவையும், திறமையும் பயன்படுத்தி கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். அந்த கண்டுபிடிப்புகள் நம் சமூக பிரச்னைகளுக்கு தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக சாரா திகழ்ந்து கொண்டிருக்கின்றார்.எதற்கும் உதவாத சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளான குப்பைகளை தனது புதிய சிந்தனையின் மூலமாக பயன்படுத்தப்படும் பொக்கிஷமாக மாற்றும் சாராவின் புதிய முயற்சி பாராட்டுக்குரியது. சாரா தனது கல்வியின் மூலமாக சமூக பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தி சாதித்துள்ளார் என்பதில் ஐயமில்லை.
The post புதிய சிந்தனை! புதிய முயற்சி! appeared first on Dinakaran.