
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ராமநாதபுரம் அரண்மனை முன்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை இளைஞர்களை சீரழித்து வருகிறது. ஆளும் கட்சியினரின் தொடர்பு உள்ளதால் போலீசாரால் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. மு.க.ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கூறி அதனை நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசு மீது பழி போட்டு வருகிறார்.
புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு என்று கூறுவது தவறான வாதம். தற்போதைய காலத்திற்கு ஏற்ப மூன்றாவதாக ஒரு மொழியை கற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சர், பிரதமர் மோடியை சந்தித்து பேசினால் தமிழகத்திற்கு வேண்டியதை மோடி நிச்சயம் செய்வார். தி.மு.க.வுக்கு எதிராக தமிழக மக்கள் உள்ளனர். எனவே மீண்டும் மொழிப்போர் என பொய் பிரசாரம் செய்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.