
வேலூரை அடுத்த ஈடிகை தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், கட்டிட மேஸ்திரி. இவரது மகன் தனசேகரன் (15 வயது). கணியம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். தனசேகரனுக்கு வருகிற 10-ந் தேதி பிறந்தநாள் என்பதால் தனது பெற்றோரிடம் புத்தாடை வாங்கவும், நண்பர்களுக்கு சாக்லேட் வாங்கி கொடுக்கவும் ரூ.1,000 கேட்டுள்ளான்.
அதற்கு மாணவனின் தந்தை வெங்கடேசன் தன்னிடம் தற்போது பணம் இல்லை. கூலி வாங்கிய பிறகு பணம் தருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் தந்தையிடம் தனசேகரன் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு படுக்கை அறைக்கு சென்ற தனசேகரன் அங்குள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டான்.
மகன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் தனசேகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.