மாஸ்கோ: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளில் விளக்கமளித்த எம்பிக்கள் குழுவில் காங்கிரஸ் எம்பி சசி தரூர் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் சசி தரூர் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஆங்கில நாளேடு ஒன்றில் கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறார். இந்த கட்டுரையில் சசி தரூர் பிரதமர் மோடியை புகழ்ந்துள்ளது சர்ச்சையாக மாறியுள்ளது.
கட்டுரையில் சசி தரூர், பிரதமர் மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு, ஈடுபாடு, விருப்பம் ஆகியவை உலக அரங்கில் இந்தியாவிற்கு முக்கிய சொத்தாக உள்ளது. அதிக ஆதரவை பெறத்தகுதியானவை என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த கட்டுரை தொடர்பாக மாஸ்கோவில் சசி தரூரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய சசி தரூர்,‘‘சிலர் துரதிஷ்டவசமாக சுட்டிக்காட்டுவது போல், பிரதமரின் கட்சியில்(பாஜ)வில் நான் சேருவதற்கான அறிகுறி அல்ல இந்த கட்டுரை. இது தேசிய ஒற்றுமை, தேசிய நலன் மற்றும் இந்தியாவுக்காக நிற்பதற்கான ஒரு அறிக்கை. இந்தியாவுக்கு சேவை செய்வதற்காக நான் அவ்வாறு செய்தேன். அவ்வாறு செய்வதற்கு வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். கட்டுரையில் ஆபரேஷன் சிந்தூரில் தூதரக ரீதியிலான தொடர்பு பணியின் வெற்றியை குறித்து விவரித்துள்ளேன்.
இன்றைய செய்திகளின் பின்னணியில் மக்கள் இதனை பார்க்க முனைகிறார்கள். இந்த தொடர்பு பணியை விவரிக்கும் கட்டுரை இதுவாகும். பிரதமர் மற்ற நாடுகளுடன் தொடர்பு கொள்வதில் சுறுசுறுப்பு மற்றும் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். அவர் மற்ற பிரதமர்களை காட்டிலும் அதிகமான நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இந்தியாவின் செய்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்காக அவ்வாறு செய்துள்ளார். இன்று இது தீவிரவாதத்துக்கு எதிரான செய்தி. நாளை அது வேறு ஏதாவது செய்தியாக இருக்கலாம்” என்றார்.
The post பிரதமர் மோடியை புகழ்ந்து கட்டுரை; பாஜவில் இணைவதற்கான அறிகுறி அல்ல: காங். எம்பி சசி தரூர் விளக்கம் appeared first on Dinakaran.