
சென்னை,
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் நடைபெற்று வருகிறது. முதலில் விழா மேடைக்கு வந்த விஜய்க்கு கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக 'கெட்அவுட்' கையெழுத்து இயக்கம் என்று வைக்கப்பட்டுள்ள பேனரில் த.வெ.க. தலைவர் விஜய் முதலில் கையெழுத்திட்டார். அவரைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பேனரில் கையெழுத்திட்டனர். அதனை தொடர்ந்து தவெக நிர்வாகிகள் கையெழுத்திட்டனர்.
அதன்பின் பிரசாந்த் கிஷோரிடம் கையெழுத்திட கேட்கப்பட்டது. ஆனால், பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுத்துவிட்டார். முன்னதாக, அந்தக் கையெழுத்து இயக்கம் குறித்து பிரசாந்த் கிஷோருக்கு ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்தார். அதன்பின்னும் ஆனந்த் கையெழுத்திட கேட்டும் பிரசாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர் என அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, யார், யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் நமக்கு கவலையில்லை. பீகார் தேர்தலில் தனது கட்சிக்கே டெபாசிட் கூட வாங்க முடியாதவர் பிரசாந்த் கிஷோர், அவர் தேர்தல் வியூகம் வகுத்தால் எப்படி இருக்கும்?. திமுக அதையும் தாண்டி வெற்றி பெறும் என கூறியுள்ளார்.