![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/25/35717574-untitled-3.webp)
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சுற்றுலா அட்டை பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படுவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சுற்றுலா அட்டை (1-நாள் சுற்றுலா அட்டை மற்றும் 30-நாள் சுற்றுலா அட்டை) பிப்ரவரி 1, 2025 முதல் நிறுத்தப்படுவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்து கொள்கிறது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அனைத்து பயணிகளுக்கும் தடையற்ற மற்றும் எளிமையான பயணங்களை வழங்கி வருகிறது. சுற்றுலா அட்டைகளை இனி பயன்படுத்த முடியாது என்றாலும், பயணிகள் தங்கள் பயணத் தேவைகளுக்கு டிஜிட்டல் பயணச்சீட்டு முறைகள், QR குறியீடு அடிப்படையிலான பயணச்சீட்டுகள், ஒற்றை பயண டோக்கன்கள் மற்றும் தேசிய பொது போக்குவரத்து அட்டை (National Common Mobility Card) உள்ளிட்ட மாற்று பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோவில் தொடர்ந்து பயணிக்கலாம். தேசிய பொது போக்குவரத்து அட்டை இப்போது MTC பேருந்துகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு தடையற்ற பயண அனுபவத்தை வழங்குகிறது.
எங்கள் பயணிகளின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் புரிதலுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மெட்ரோ பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்வதற்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முழுமுயற்சி எடுத்து வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.