திருவாருர்,மே14: திருவாரூர் மாவட்டத்தில் பி.எம் கிசான் திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகள் தங்களது ஆதார் விபரங்களை பதிவு செய்யுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது,
தமிழகத்தில் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டமானது, 2018-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்களை கொள்முதல் செய்ய மத்திய அரசானது, விவசாய குடும்பத்துக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை பதிவு செய்த விவசாயிகளுக்கு 19 தவணைத் தொகைகள் வரப்பெற்று அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 20வது தவணைத் தொகை பெறுவதற்கு, விவசாயிகள் தங்களது ஆதார் விபரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனவே, இந்த திட்டத்தினபடி, பதிவு செய்து பயன்பெற தகுதியான பயனாளிகள் அனைவரும் பெயர் மற்றும் ஆதார் விபரங்களை மத்திய அரசின் பி.எம் கிஷான் இணைய வாயிலாக விவசாயிகள் நேரடியாக பதிவு செய்ய வேண்டும் என்பதுடன் திட்ட பயனாளிகள் தங்களது அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரிடையாக ஆதார் விபரங்களை எடுத்துச் சென்று கைரேகை வைத்து பெயர் உள்ளிட்ட விபரங்களை பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும். பி.எம் கிஷான் திட்ட பயனாளிகள் அனைவரும் இந்த 2 வழிமுறையில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே அடுத்த தவணை உதவித்தெகை கிடைக்கும். எனவே, மாவட்டத்தில் இதுவரையில் தங்களது நில உடமை மற்றும் ஆதார் விபரங்களை பதிவேற்றம் செய்யாமல் இருந்து வரும் விவசாயிகள் அனைவரும் உடனடியாக பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன் இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மேகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
The post பி.எம் கிசான் திட்டத்தில் ஆதார் விபரங்களை பதிவு செய்ய கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.