
நெல்லை,
மத்திய அரசு மும்மொழி கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம், மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நெல்லை பாளையங்கோட்டை ரெயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் இருக்கும் இந்தி எழுத்துகளை அழித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நெல்லை பாளையங்கோட்டை ரெயில் நிலையத்தில் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 7 பேருக்கு தலா ரூ.10,000 அபராதம் அல்லது சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.