
திருப்பதி:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது. தினமும் இரவு உற்சவ மூர்த்திகள் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
முதல் நாள் மாலையில் ருக்மணி, சத்தியபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணரும், இரண்டாம் நாளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜசாமியும் தெப்பத்தில் எழுந்தருளினர்.
மூன்றாவது நாளான இன்று பத்மாவதி தாயார், பத்மபுஷ்கரணியில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பின்னர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து கோவிலை சென்றடைந்தார்.
இந்நிகழ்வில் திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அதிகாரி ஹரிந்திர நாத், கூடுதல் செயல் அதிகாரி தேவராஜுலு, கண்காணிப்பாளர் ரமேஷ், கோவில் இன்ஸ்பெக்டர்கள் சலபதி மற்றும் அதிகாரிகள், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தாயாரை தரிசனம் செய்தனர்.
நாளை மறுநாள் வரை தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இந்த நாட்களிலும் பத்மாவதி தாயார் தெப்பத்தில் எழுந்தருள்கிறார்.